பிரபல நடிகரும்; டைரக்டர் வியட்நாம் வீடு சுந்தரம் மரணம்....

No comments

பிரபல நடிகரும் வசனகர்த்தாவுமான வியட்நாம் வீடு சுந்தரம் சென்னையில் மரணம் அடைந்தார்.

வியட்நாம் வீடு

பழம்பெரும் சினிமா வசனகர்த்தா வியட்நாம் வீடு சுந்தரம். இவர் 1970-ல் சிவாஜி கணேசன்-பத்மினி ஜோடியாக நடித்த ‘வியட்நாம் வீடு’ படத்துக்கு கதை, வசனம் எழுதி சினிமாவில் அறிமுகமானார். அந்த படம் வெற்றி பெற்றதால் படத்தின் பெயரையே தனது பெயருடன் சேர்த்து வியட்நாம் வீடு சுந்தரம் என்று அழைக்கப்பட்டார்.

தொடர்ந்து எம்.ஜி.ஆர் நடித்த ‘நான் ஏன் பிறந்தேன், நாளை நமதே,’ சிவாஜி நடித்த ‘அண்ணன் ஒரு கோயில், ஞான ஒளி, ஜஸ்டிஸ் கோபிநாத்,’ உள்ளிட்ட பல படங்களுக்கு கதை, வசனம் எழுதினார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களிலும் பணியாற்றி இருக்கிறார். சிவாஜி கணேசன் இரு வேடங்களில் நடித்து, வெற்றி பெற்ற ‘கவுரவம்’ படத்தை டைரக்டு செய்தார்.

டைரக்டர்

தேவி கருமாரியம்மன், விஜயா, ஞான பறவை உள்பட மேலும் பல படங்களையும் டைரக்டு செய்துள்ளார். அப்பு, கண்ணாமூச்சி ஏனடா, கோலாகலம் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தும் இருக்கிறார். சமீப காலமாக டெலிவிஷன் தொடர்களில் நடித்து வந்தார். சென்னை தியாக ராயநகர் ராமன் தெருவில் வியட்நாம் வீடு சுந்தரம் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

ஒரு வாரத்துக்கு முன்பு அவருக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு உடல் நிலை திடீரென மோசம் அடைந்து வீட்டிலேயே மரணம் அடைந்தார். அவருக்கு வயது 76. மரணம் அடைந்த வியட்நாம் வீடு சுந்தரத்துக்கு செல்லா என்ற மனைவியும் அனு பார்த்தசாரதி, சுவேதா என்ற மகள்களும் உள்ளனர்.

நடிகர்கள் அஞ்சலி

தியாகராயநகரில் உள்ள வீட்டில் வியட்நாம் வீடு சுந்தரம் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. நடிகர் சிவகுமார், நடிகைகள் குஷ்பு, விஜி சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் உள்ளிட்ட திரையுலகினர் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். மயிலாப்பூரில் உள்ள மயானத்தில் நேற்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

No comments :

Post a Comment