இது பத்மினியின் காதல் கதை : கண்ணடிக்கிறார் விஜய் சேதுபதி

No comments

‘‘எல்லாருமே சின்ன வயசுல நாம விளையாடிய அல்லது நம்மோட இருந்த ஏதாவது ஒரு பொருள் மேல அதிகமா பாசம் வச்சிருப்போம். சிலருக்கு சிலேட். சிலருக்கு சைக்கிள். சிலருக்கு டிரான்சிஸ்டர்னு நிறைய இருக்கலாம். அப்படி ஒரு பண்ணையாருக்கு தன்னோட கார் மேல இருக்கிற காதல்தான், ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தோட கதை. நான் எல்லா படங்களையுமே எனக்குப் பிடிச்சுதான் பண்றேன். இருந்தாலும் என் மனசுக்கு நெருக்கமா இருக்கிற படம்னா இதைத்தான் சொல்வேன். ஏன்னா இப்படியொரு படம் பண்றது கஷ்டம்...’’ என்கிறார் விஜய் சேதுபதி. ‘சங்குதேவன்’ படத்துக்காக வீச்சரிவாள் மீசையோடு கெட்டப் மாற்றியிருக்கிறார்.

‘‘அன்பா பாசம் காட்டுற மக்கள், அங்க இருக்கிற பண்ணையார், அவங்க பழக்க வழக்கம், எடக்கு மடக்கு, வயக்காடு, காதல், கல்யாணம், கோபம்னு இப்படியொரு ஊர்ல போய் வசிக்கணுண்டான்னு எல்லோரையும் ஏங்க வைக்கிற படமா இது இருக்கும். நான் பொய் சொல்லலை. அப்படியொரு உணர்ச்சிப்பூர்வமான, கவிதை மாதிரியான கதை இதுல இருக்கு. இந்தக் கதையை கேள்விப்பட்டு நடிகர் நானி தெலுங்கு ரைட்ஸ் வாங்கி இருக்கார்னா பாருங்களேன்...’’ என்கிறார் விஜய் சேதுபதி. இதில் அவர் முருகேசன் என்கிற கார் டிரைவராக நடித்திருக்கிறார். 

கதையில உங்க காதல் எப்படி?
என்னோட காதலை விட பண்ணையாருக்கும் அவர் மனைவிக்குமான காதல்தான் சூப்பரா இருக்கும். பண்ணையாரா ஜெயப்பிரகாஷ், அவர் மனைவியா துளசியும் நடிச்சிருக்காங்க. அவங்க ரெண்டு பேருக்குமான காட்சிகள் சுவாரஸ்யமா இருக்கும். 

‘அட்ட கத்தி’ தினேஷ், சினேகா நடிச்சிருக்காங்களாமே?
கெஸ்ட் ரோல் பண்றாங்க. என்ன கேரக்டர்னு சொன்னா சஸ்பென்ஸ் போயிடும். ஆனா, அவங்க ரெண்டு பேர் கேரக்டரும் கதைக்கு வலு சேர்க்கிற விதமா இருக்கும். டைரக்டர் அருண்குமார் அருமையா திரைக்கதை அமைச்சிருக்கார். இந்தப் படத்தோட எல்லா கேரக்டரும் எல்லாருக்கும் பிடிக்கும். தங்களை கதையோட தொடர்புபடுத்திக்க நிறைய விஷயங்கள் படத்துல இருக்கு.

புது இயக்குநர்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறதா சொல்றாங்களே?
நல்ல விஷயம்தானே. வித்தியாசமான டேஸ்ட்ல கதை வச்சிருக்கிறவங்க என்னைத் தேடி வர்றாங்க. நீங்க பார்த்தீங்கன்னா, ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘பீட்ஸா’, ‘சூது கவ்வும்’ எல்லாமே வித்தியாசமான கதைக் களம்தான். அதை எப்படி நான் அவாய்ட் பண்ண முடியும்? புது இயக்குநர்களா இருந்தாலும் படத்துல என்னோட பங்குங்கறது கொஞ்சம்தான். சொன்ன கதையை அழகா எடுத்தது அவங்கதானே? இதுல எல்லா பாராட்டும் அவங்களைத்தான் சேரும். தவிர புது டைரக்டர் இல்லாதவங்க கூடயும் வேலை பார்க்கிறேன். 

அடுத்து ‘வன்மம்’, ஆர்யாவோட ‘புறம் போக்கு’, சீனு ராமசாமி படம்னு ரெண்டு ஹீரோ சப்ஜெக்ட்ல நடிக்கிறீங்களே?
சார், ‘லீ’, ‘புதுப்பேட்டை’னு பல படங்கள்ல நான் சின்ன சின்ன கேரக்டர் பண்ணினவன். ரெண்டு ஹீரோ படத்துல நடிக்கிறதுல என்ன தப்பு இருக்கு? என்னோட கேரக்டர் நல்லா இருந்தா போதும். மற்றபடி எத்தனை ஹீரோவோட சேர்ந்து வேணாலும் நடிப்பேன். அதுல எனக்கு பிரச்னை இல்லை.

சினிமாவுக்கு வந்து பத்து வருஷங்களாச்சு. நீங்க நினைச்சது நிறைவேறியிருக்கா?
2003ல துபாய்ல வேலையை விட்டுட்டு சென்னைக்கு வந்தேன். 10 வருஷங்கள் கழிச்சு, ‘சைமா’ விருதுக்காக மீண்டும் துபாய் போனேன். கரெக்டா அதுவும் செப்டம்பர் மாசமா இருந்ததால ஏதோ மேஜிக் மாதிரி இருந்தது. அதனால சென்டிமென்ட் பீலிங் வந்துச்சு. அவ்வளவுதான். மற்றபடி நான் எதையும் நினைச்சதில்லை. இந்தா இப்படி ஹீரோ ஆவேன்னு நான் நினைச்சுக்கூட பார்க்கல. ஏன்னா எதையும் திட்ட மிட்டு பண்ணலை. எனக்கு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. எல்லாம் அதுவா அமைஞ்சதுதான்.

No comments :

Post a Comment