ரூ.1000 கோடி பட்ஜெட்டில் 5 மொழிகளில் உருவாகும் மகாபாரத கதை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு....

No comments

மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த ‘புலிமுருகன்’ படம்தான் மலையாளத்திலேயே அதிக பட்ஜெட்டில் உருவானது. அப்படம் சுமார் ரூ.25 கோடி பட்ஜெட்டில் உருவானது. வசூலில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்தின் வசூலைத் தொடர்ந்து மலையாளத்தில் பெரிய பட்ஜெட்டில் படங்கள் தயாரிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மலையாளத்தின் மூத்த எழுத்தாளரும், கதாசிரியருமான எம்.டி.வாசுதேவநாயரின் ‘இரண்டாம் ஊழம்’ என்ற நாவலை மையப்படுத்தி ரூ.600 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்கப்போவதாக அறிவித்திருந்தனர். இந்த படத்தில் மோகன்லால் நடிக்கப்போவதாகவும் செய்திகள் வெளிவந்தது. தற்போது அந்த செய்தியை உறுதிப்படுத்தும்விதமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

பி.ஆர்.ஷெட்டி என்ற தயாரிப்பாளர் இந்த நாவலை படமாக தயாரிக்க முன்வந்துள்ளார். ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகப்போவதாக கூறப்பட்ட இந்த படத்தை ரூ.1000 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளார்களாம். இப்படத்தில் மோகன்லால் நடிக்கவுள்ளார். மேலும், இப்படத்திற்கு ‘மகாபாரதா-ரெண்டாம் ஊழம்’ என்று பெயர் வைத்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ செய்திகள் வெளிவந்துள்ளது. மகாபாரத்தில் பஞ்ச பாண்டவர்களில் இரண்டாவதாக வரும் பீமனின் பார்வையில் வைத்து இந்த கதையை எழுதியுள்ளாராம்.

ஸ்ரீகுமார் மேனன் இப்படத்தை இயக்கவுள்ளார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் படமாக்கவுள்ளனர். இதுதவிர, பிற இந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளிலும் இப்படத்தை டப் செய்து வெளியிடவுள்ளனர். இந்திய சினிமா மற்றும் ஹாலிவுட் சினிமாவில் உள்ள கலைஞர்கள் இப்படத்தில் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இதன் படப்பிடிப்பை 2018 செப்டம்பர் மாதத்தில் தொடங்கி, 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை இரண்டு பாகமாக எடுக்கவுள்ளதாகவும், முதல் பாகம் வெளிவந்த அடுத்த 3 மாதங்களுக்குள் இரண்டாம் பாகத்தை வெளியிடவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

மோகன்லால் நடிக்கவுள்ள இப்படத்தில் ஏற்கெனவே பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரும் இணையப்போவதாக செய்திகள் வெளிவந்தது. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால், அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. கூடிய விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என நம்பலாம்.



No comments :

Post a Comment