இது மாணவர்களின் வெற்றி!”இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான தமிழக மாணவர்களின் போராட்டக் கதை

No comments
வெற்றிவேல் சந்திரசேகர்... 'இப்படிக்கு, தோழர் செங்கொடி’ ஆவணப்படம் மூலம் அறியப்பட்டவர். கடந்த மார்ச்-ஏப்ரல் மாதங்களில் இந்திய அரசியலையே அசைத்துப் பார்த்த இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான தமிழக மாணவர்களின் போராட்டத்தை, 'அறப்போர்’ என்ற பெயரில் சுவிட்சர்லாந்து தமிழர் கபிலனின் உதவியோடு ஆவணப்படமாக உருவாக்கியுள்ளார்.

 படம் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்... ''நம் மாணவர்களின் போராட்ட வீரியத்தைப் பார்த்து ஆடிப்போன அமெரிக்காவே, 'இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானமே இந்தியாவின் ஒப்புதலோடுதான் தயாரிக்கப்பட்டது. உங்கள் கோபம் நியாயமாக இந்தியா மீதுதான் இருக்க வேண்டும்’ என்று பின்வாங்கியது.

இது நம் மாணவர்களின் போராட்டத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி. இந்தித் திணிப்புக்கு எதிரான அப்போதைய போராட்டத்துடன் ஒப்பிடும்போது, இப்போதைய போராட்டம் ஒரு சிறு அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் நடந்தது. எனவேதான், அறவழியில் நடந்த இந்தப் போராட்டத்தை 'அறப்போர்’ என்று பதிவு செய்திருக்கிறோம். நம்முடைய மிகப் பெரிய குறை, வரலாற்றுப் பதிவுகளை முறையாக ஆவணப்படுத்தாததுதான்.

அந்தக் குறை இந்த மாணவர் போராட்டத்துக்கு வந்துவிடக் கூடாது என்ற ஆதங்கத்திலேயே 'அறப்போர்’ ஆவணப் படத்தை உருவாக்கினோம்! 'மாணவர் போராட்டத்தை ஆதரிக்கிறோம்’ என்று ஈழ ஆதரவுக் கட்சித் தலைவர்கள் பலரும் அறிக்கைவிடுத்தனர். ஆனால், அவர்களில் சிலர், மாணவர் போராட்டம் பற்றிய ஆவணப்படத்தில் கருத்துக்கூற மறுத்துவிட்டனர். தேர்தல் அரசியலின் லாபத்தை மாணவர்கள் போராட்டம் கலைத்துவிட்டதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

வெறுமனே அமெரிக்க அறிக்கையை எதிர்த்து மட்டுமே இந்தப் போராட்டம் நடந்துவிடவில்லை. இந்தப் போராட்டத்துக்கு முக்கியமான ஒரு பின்னணி இருக்கிறது. அந்த உருக்கமான பின்னணி படம் பார்ப்பவர்களின் மனதை நிச்சயம் தொடும்!'' நம்பிக்கையாக முடிக்கிறார் வெற்றிவேல் சந்திரசேகர்.


No comments :

Post a Comment