சேரன் மகள் பெற்றோருடன் செல்ல மறுப்பு பள்ளி தாளாளர் வீட்டில் தங்க உத்தரவு

No comments
சேரன் மகள் தாமினி பெற்றோருடன் செல்ல மறுத்ததால் வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது. அதுவரை பள்ளி தாளாளர் வீட்டில் அவர் தங்கியிருக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். சேரன் மகள் தாமினியை மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி காதலன் சந்துருவின் தாய் ஈஸ்வரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் தனபாலன், சி.டி.செல்வம் ஆகியோர் விசாரித்து தாமினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டனர். அதன்படி தாமினி நேற்று முன் தினம் மதியம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரிடம் நீதிபதிகள் ரகசியமாக விசாரித்தனர். அப்போது தாமினி தான் காதலனுடன்தான் செல்வேன், பெற்றோருடன் செல்ல மாட்டேன். நான் மேஜர். எனக்கு 20 வயதாகிவிட்டது என்று கூறினார்.

இதை தொடர் ந்து சேரன், அவரது மனைவி ஆகியோர் நீதிபதிகள் முன்பு ஆஜராகி, எனது மகளுக்கு எதுவும் தெரியாது. காதலன் நல்லவர் இல்லை. எனவே எனது மகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதை கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். அதுவரை மூத்த வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் வீட்டில் தாமினி தங்கியிருக்க உத்தரவிட்டனர்.

இதை தொடர்ந்து இந்த வழக்கு நேற்று அதே நீதிபதிகள் முன்பு மதியம் 2.15 மணிக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அறையில் 3 மணி நேரம் ரகசிய விசாரணை நடந்தது. முதலில் நீதிபதிகள் தாமினியை அழை த்து ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் சேரன், அவரது மனைவி ஆகியோரை அழைத்து ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் இரு தரப்பு வக்கீல்களையும் அழைத்து விசாரணை நடத்தினர்.

இறுதியில் வழக்கை 2 வாரம் தள்ளிவைப்பது என்றும், அதுவரை  தாமினி அவர் படித்த வேளாங்கண்ணி பள்ளியின் தாளாளர் பி.கே.கே.பிள்ளை வீட்டில் தங்கியிருக்க வேண்டும். 2 வாரத்திற்கு பிறகு வழக்கு விசாரணையை வரும் 21ம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அன்றைக்கு தாமினியை நீதிமன்றத்தில் பள்ளி தாளாளர் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

கருத்து கூற விரும்பவில்லை சேரன் கண்ணீர் பேட்டி

சேரன் மகள் வழக்கு நேற்று மாலை தள்ளிவைக்கப்பட்டதும் நீதிபதிகள் அறையில் இருந்து சேரன், அவரது மனைவி ஆகியோர் வெளியே வந்தனர். பின்னர் நீதிமன்ற வளாகத்தில் சேரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கண்ணீர் மல்க சோகமாக கூறியதாவது: நீதிபதிகள் என்னையும் எனது மகளையும் தனித்தனியாக அழைத்து பேசினார்கள். வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது. அதுவரை எனது மகள் அவர் படித்த பள்ளி தாளாளர் வீட்டில் தங்கியிருக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். வேறு எதுவும் வழக்கு பற்றி கருத்து கூறிவிரும்ப வில்லை. நீதிமன்றத்தில் ரகசிய விசாரணை நடந்துள்ளது.  இவ்வாறு சேரன் கூறினார்.

பின்னர் அவரது வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் கூறும்போது, தாமினி யாரிடம் போவது என்ற விவாதம் நீதிமன்றத்தில் நடக்கவில்லை. தாமினியை சட்டவிரோதமாக காப்பகத்தில் அடைத்து வைத்துள்ளனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றுதான் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். காப்பகத்திற்கு பதில் பள்ளி தாளாளர் வீட்டில் தங்க வைக்கப்பட்டார்.  2 வாரத்திற்கு வழக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு அவர் எங்கு செல்வார் என்று தெரியும் என்றார்.



No comments :

Post a Comment