திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வைரமுத்து கோரிக்கை

No comments
 திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு வெற்றித் தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து நேற்று மரியாதை செய்தார். பின்னர் அவர் பேசியதாவது: அறிவுலகம் தலை சிறந்த சமூக அரசியல் நூல்களாக மூன்றைக் கருதுகிறது. கவுடில்யரின் அர்த்த சாஸ்திரம், மாக்கிய வல்லியின் தி பிரின்ஸ் மற்றும் திருவள்ளுவரின் திருக்குறள். 

மற்ற இரு நூல்களையும் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை. ஆனால் திருக்குறள் மானுட மேன்மையில் ஒரு படி உயர்ந்து நிற்கிறது. மற்ற இரண்டு நூல்களும் வாழ்வில் வெற்றி முக்கியம்; வெற்றிக்கான வழிமுறைகள் முக்கியமில்லை என்கின்றன. ஆனால், வெற்றியைப் போலவே அதை அடையும் வழியும் மேம்பட்டதாக இருக்க வேண்டும் என்கிறது திருக்குறள். இந்தத் திருநாளில் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். மதச்சார்பற்ற அரசின் கீழ் இயங்குகிறோம்.

 மதச்சார்பற்ற அரசின் கீழ் ஆளப்படுகிறோம். அப்படியானால் மதச்சார்பற்ற நூலைத்தான் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். அதற்குத் திருக்குறளைப் போல் அரிய நூல் வேறொன்றுமில்லை. இந்தியாவின் தேசிய நூலாகத் திருக்குறளை அறிவிக்க வேண்டும். இவ்வாறு வைரமுத்து பேசினார். நிகழ்ச்சியில் தமிழிசைப் பாடகி கடலூர் ஜனனி, பத்துக் குறள்களை மெட்டமைத்துப் பாடினார். முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன், நடிகர் ராஜேஷ், காவ்யா சண்முகசுந்தரம், டாக்டர் அபிலாஷா, மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments :

Post a Comment