மதுரையை ரத்த பூமியாக சித்தரிக்க வேண்டாம்! - பாரதிராஜா பேச்சு

No comments
மதுரையை வெட்டு குத்து என்று கொலைகளாக நடைபெறும் ரத்த பூமியைப்போன்று சித்தரிக்க வேண்டாம் என்று இயக்குனர் பாரதிராஜா கேட்டுக்கொண்டார். சித்தார்த்-லட்சுமிமேனன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் ஜிகர்தண்டா. மதுரை மண்வாசனை கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை பீட்சா படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. 
விழாவில், இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர் எஸ்.தாணு, சித்தார்த், கார்த்திக் சுப்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் இயக்குனர் பாரதிராஜா பேசுகையில், மதுரையை மையமாகக்கொண்டு நிறைய படங்கள் தயாராகின்றன. ஆனால், அப்படி வரும் படங்களில் மதுரையை ரத்த பூமி போலவே சித்தரிக்கிறார்கள். அது தவறு. 
ஒரு காலத்தில் வேண்டுமானால் மதுரை அப்படி இருந்திருக்கலாம் ஆனால் இப்போது அப்படியில்லை. மேலும், சினிமா என்பது வன்முறையை தூண்டும் விசயமாக இருந்து விடக்கூடாது. அதனால் இளையதலைமுறை இயக்குனர்கள் தங்கள் படங்களில் அதிகமான வன்முறைகளை வைப்பதை குறைத்துக்கொள்ளுங்கள். 
அதோடு, பிரமாண்டத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், மண்சார்ந்த அழுத்தமான கதைகளை நல்ல சிந்தனைகளுடன் பதிவு செய்யுங்கள். அந்த மாதிரி படங்களே காலத்தால் அழியாமல் நிற்கும். மேலும், இந்த படத்தின் நாயகன் சித்தார்த், ஒரு அற்புதமான நடிகர்
அவர் நடிக்கிறார் என்பது தெரியாமலேயே நடிப்பார். அந்த அளவுக்கு சித்தார்த்தின் நடிப்பு இயற்கையாக இருக்கும். அந்த வகையில், இந்தி நடிகர் நானா படேகர் போன்று சித்தார்த்தின் நடிப்பும் இயற்கையாக உள்ளது என்று சொன்ன பாரதிராஜா, இந்த படத்தை இயக்கியுள்ள கார்த்திக் சுப்புராஜ், பீட்சா என்ற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்தவர். எந்தவித பிரமாண்டமும் இல்லாமல், இயக்குனரின் மூளையை மட்டும் செலவு செய்து எடுக்கப்பட்ட படம் அது. 
அதேபோல் இந்த ஜிகர்தண்டா படத்தின் காட்சிகளும், பாடல்களும் சிறப்பாக உள்ளது. அதனால் இப்படமும் வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments :

Post a Comment